புதுச்சேரி : ‘என் வீட்டை காணவில்லை’ என்று காவல் நிலையத்தில் புதுவை அரசு ஊழியர் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் வடிவேலு ஒரு காமெடி காட்சியில், ‘என் கிணற்றை காணவில்லை’ என்று புகார் செய்து, போலீசை நிலைகுலைய செய்வார். அதே போல், புதுவை அரசு ஊழியர் ஒரு புகார் கொடுத்து போலீசாரை திகைக்க வைத்துள்ளார்.
புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்த தானாம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரமோகன்(58). புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள பாசிக் அலுவலகத்தில் டெப்போ மேலாளர். இவருக்கு கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த வேகா கொல்லை கிராமத்தில் இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 5 சென்ட் பண்ணைவீடு இருந்தது. கடந்த 30ம் தேதி வீசிய ‘தானே’ புயலில் இவரது கூரை வீடு சின்னாபின்னமானது. தோப்பில் 40க்கும் மேற்பட்ட பலா மரங்கள் அடியோடு சாய்ந்தன. ஆனால், இவர் வீடு இடிந்ததை அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளாததால், இவருக்கு அரசிடம் இருந்து நிவாரண உதவி கிடைக்கவில்லை.
இதனால் அதிருப்தியடைந்த சந்திரமோகன், தனது வீட்டை காணவில்லை என காடாம்புலியூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட எஸ்.பி. பகலவனிடம் மனு கொடுத்துள்ளார். இது குறித்து சந்திரமோகன் கூறுகையில், ‘எனது பண்ணை வீட்டை காணவில்லை என்று, காடாம்புலியூர் காவல்நிலையம், எஸ்.பி, கலெக்டர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி உள்ளேன். போலீஸ் நடவடிக்கை எடுக்க கோரி, உயர்நீதிமன்றத்தையும் அணுக உள்ளேன்’ என்றார். புகாரை பெற்ற, காடாம்புலியூர் போலீசார் என்ன செய்வது என புரியாமல், குழம்பி போயுள்ளனர்.
No comments:
Post a Comment