ஹெல்மெட் எவ்வளவு முக்கியம் என்பது, ஒவ்வொரு வினாடியும் உணர வைக்கின்றன விபத்துகள்... கோவையில், தினமும் 10 விபத்துகள் நடக்கின்றன. போக்குவரத்து சிக்கல்களால், உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன; பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவோரால், சரியான முறையில் செல்வோருக்கும் விபத்து ஏற்படுகிறது.
கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் நவீன்குமார்,23. இவரது 10வது வயதில் இவரின் தந்தை, ஒரு விபத்தில் இவரை விட்டு பிரிந்தார். தாய் உழைப்பில் இவரும், இவரின் சகோதரரும் வளர்ந்தனர். நவீன்குமார், நல்ல மதிப்பெண் பெற்று, பீளமேட்டிலுள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். கனவுகள் நனவாகி, கஷ்டங்கள் கரையும் நாளை எதிர்நோக்கியிருந்தார் தாய். உழைப்பால் கற்று தேர்ந்த நவீன்குமார், எப்போதும் பொறுப்போடு இருப்பார். ஆனால், விதி விளையாடியது; ஏப்ரல் 26ம் தேதி, அவினாசி ரோட்டில், ஸ்கூட்டி பெப் வாகனத்தில் சென்றார். ஹெல்மெட்டை வண்டியில் வைத்துக்கொண்டே அணிய மறந்தார். எதிர்பாராமல் விபத்து நடந்தது. நவீன்குமார் தலை தரையை தொட்டது. பலத்த அடிபட்டதால் மயக்கமானார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தீவிர சிகிச்சை பலனளிக்கவில்லை. இறுதி மூச்சில் நேற்று வரை வாழ்ந்தார். ஆனால், விதி விளையாடியதில் உயிர் பிரிந்தது. மூளையும் சாவுக்கு தயாரானது. கனவுகள் கரைந்தன. கணவனை பிரிந்து, தற்போது மூத்த பிள்ளையையும் பிரிந்தார், அவரின் தாய் புஷ்பவதி. பெற்ற பிள்ளையை பிரிந்த துயரம் மட்டுமல்ல... சில நாட்களில் கடும் உழைப்புக்கு விடுதலையும், புதிய வாழ்க்கை தொடங்கப்போகிறது என்ற கனவும் கரைந்தது. அடுத்த பிள்ளையை படிக்க வைக்க நிற்கதியாய் நிற்கிறார் புஷ்பவதி. ஹெல்மெட் கைக்கு அருகில் இருந்தும் அணியாததால் உயிரை விட்ட, அவரின் உடல் உறுப்புகளை மட்டுமே தானமாக்க முடிந்தது. கண்கள், கல்லீரல், சிறுநீரகம் மட்டுமே உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. சாலை விபத்துகள், எவ்வளவோ குடும்பங்களை ஊனமாக்கி விட்டன. நிற்கதியாக்கி விட்டன.ரோட்டில் கவனமாக சென்றாலும், கவனமின்றி போட்டிபோட்டு முந்திச் செல்லும் பொறுமையின்மையால் ஏற்படும் இழப்பை, யாரும் ஈடுகட்ட முடியாது.
No comments:
Post a Comment