Saturday, December 31, 2011

குப்பைக்கு தங்ககாசு- ஸ்ரீரங்கம் நகராட்சி அறிவிப்பு


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
திருச்சி : சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் ஸ்ரீரங்கம் பகுதியை தூய்மைப்படுத்தும் வகையில், ‘குப்பை கொடுத்தால் தங்கம் கிடைக்கும்‘ என்ற புதிய திட்டத்தை மாநகராட்சி கமிஷனர் வீரராகவராவ் அறிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. வரும் 5ம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளதால் ஸ்ரீரங்கம் பகுதியில் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி ஸ்ரீரங்கம் பகுதியில் பக்தர்களுக்கு குடிநீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் கப்களில் டீ வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஸ்ரீரங்கத்தில் 51 இடங்களில் குடிநீர் தொட்டி வைத்து, தன்னார்வலர்கள் மூலம் குடிநீர் வினியோகிக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அந்த 51 இடத்திலும் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு மையம் ஏற்படுத்தி, அங்கு பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்து தரும் நபர்களுக்கு, குலுக்கல் மூலம் தங்க காசு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதுபற்றி மாநகராட்சி கமிஷனர் வீரராகவராவ் கூறுகையில், ‘‘ஸ்ரீரங்கம் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் 51 இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு மையமும் அமைக்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் பகுதிகளில் கீழே கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து, இந்த மையங்களுக்கு கொண்டு வந்து கொடுக்கும் நபர்களுக்கு இலவச பரிசு கூப்பன் வழங்கப்படும். அவ்வப்போது குலுக்கல் நடத்தி பரிசுக்குரிய கூப்பன்களை தேர்வு செய்து, மைக்செட் மூலம் பரிசுக்கு உரியவர்கள் விவரம் அறிவிக்கப்படும். முதல் பரிசாக 5 பேருக்கு தங்க காசுகளும், இரண்டாவது பரிசாக 21 நபர்களுக்கு வெள்ளி காசுகளும், ஆறுதல் பரிசாக மின் சிக்கன எல்இடி பல்புகளும் வழங்கப்பட உள்ளது’’ என்றார்.


No comments:

Post a Comment