Wednesday, May 09, 2012

'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி!











 தமிழக 'குடிமக்களை' எப்படியெல்லாம் திருப்திப்படுத்தலாம், குளிர்விக்கலாம் என்பதை அக்கறையுடன் பார்த்துப் பார்த்து செய்து வருகிறது அரசின் டாஸ்மாக் நிறுவனம். பல்வேறு புதிய வகைகளை அறிமுகம் செய்து வரும் டாஸ்மாக் நிறுவனம் தற்போது பிரான்ஸ் நாட்டிலிருந்து திராட்சை சுவையுடன் கூடிய புதிய வகை பிராந்தியை இறக்குமதி செய்து குடிமக்களுக்கு அறிமுகம் செய்து களிப்பூட்டியுள்ளது.


பிரான்ஸில் பிரபலமான ஒரு பிராந்தி வகைதான் இந்த எக்ஸ்ஓ பிராந்தி, அதாவது எக்ஸ்ட்ரா ஓல்ட் பிராந்தி. இதில் பலவகை தயாரிப்புகள் உள்ளன. அதில் ஒரு வகையை தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளில் சென்னையைச் சேர்ந்த கோல்டன் வாட்ஸ் நிறுவனம் மூலம் தமிழக அரசு தமிழக குடிமக்களின் 'நலனை'க் கருதி அறிமுகப்படுத்துகிறது.

தற்போது இது தமிழகத்தில் உள்ள பிரபலமான ஹோட்டல்களில் இது தாராளமாக கிடைக்கிறது. அதேபோல டாஸ்மாக் கடைகளிலும் இது விற்பனைக்கு வந்துள்ளது.

டின்களில் அடைத்து இதை 'குடிமக்களுக்காக' விற்பனை செய்கிறார்கள். இப்படி பிராந்தியை டின்னில் அடைத்து விற்பது இதுதான் முதல் முறையாகும்.

புகழ்பெற்ற திருவாரூர் மாவட்டத்தில்தான் இந்த பிராந்தியை டின்னில் அடைக்கும் வேலையை செய்கின்றனர். அங்குள்ள பாட்டிலிங் பிளான்ட்டில் பிராந்தியை டின்னில் அடைத்து தமிழகம் முழுவதும் விநியோகம் செய்கின்றனர். 180 மில்லி, 375, 750 மற்றும் ஒரு லிட்டர் கேன் என்ற அளவில் இது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.

ரொம்ப டேஸ்ட்டாக இது இருக்குமாம், திராட்சை சுவையுடன் கூடியதாக இருக்குமாம். வாடிக்கையாளர்களை இது வெகுவாக கவரும் என்று கோல்டன் வாட்ஸ் நிறுவனம் நம்பிக்கையுடன் கூறுகிறது.

நம்பி வந்தவர்களை தமிழக மக்கள் என்றும் கைவிட்டதில்லை, அந்த வகையில் இந்த பிரெஞ்சு பிராந்திக்கும் தமிழக குடிமக்கள் பெரிய 'ஓ' போட்டு ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்பலாம்.

No comments:

Post a Comment