உலாந்தி வனச்சரகப் பகுதியில் உள்ள சுற்றுலாத் தலமான டாப்சிலிப்பில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக யானை சவாரி துவங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட வனப் பகுதியாகும்.கோடைக்காலத்தில் வனப்பகுதிகளில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை ஆனைமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.கடந்த சில தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக, கடந்த மே 1ம் தேதி முதல் ஆனைமலை புலிகள் காப்பகம் திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். உலாந்தி வனச்சரகப் பகுதிக்கு உள்பட்ட சுற்றுலாத் தலமான டாப்சிலிப் பகுதியில் யானை சவாரி வெள்ளிக்கிழமை முதல் துவங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து உலாந்தி வனச்சரகர் சரவணன் கூறியது.வனத்துறை சார்பில் நடைபெறும் இந்த யானை சவாரியில் கோழிகமுத்தி முகாமிலுள்ள யானைகள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்ட உள்ளன. ஒரு முறை சவாரி செய்வதற்கு ரூ. 400 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அரை மணி நேரம் வனப் பகுதிக்குள் யானை மீது சவாரி செய்ய அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மேலும் டாப்சிலிப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களை உபயோகப்படுத்தாமல், வனத்தைப் பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment