Monday, January 16, 2012

2ம் ஆண்டு தேர்வு எழுதிய பொறியியல் மாணவர்களில் 75% பேர் தோல்வி


சென்னை : பொறியில் தேர்வு எழுதிய 2ம் ஆண்டு மாணவர்களில் சுமார் 75 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு தரமற்ற கல்லூரிகள் மற்றும் ஆசிரியர்களே காரணம் என்றும் கூறப்படுகிறது.
சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கீழ் அரசு, தனியார் உள்ளிட்ட 170 தொழில்நுட்ப கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் மொத்தம் 70 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியானது.

இந்த தேர்வு முடிவில் 2ம் ஆண்டு பொறியியல் மாணவர்கள், ஏதாவது ஒரு தாளில் தோல்வியடைந்திருந்தனர். இது, 75 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தோல்வி சதவீதம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்பெல்லாம், பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு 12ம் வகுப்பில் குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆனால், தற்போது பொறியியல் கல்லூரிகள் பெருக்கத்தின் காரணமாக, 35 சதவீத மதிப்பெண் பெற்றாலே, பொறியியல் கல்லூரியில் சேரலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், சில மாணவர்கள் 10ம் வகுப்புடன் படிப்பை முடித்து விட்டு டிப்ளமோ கல்வியில் சேர்கின்றனர். இதனால், 11 மற்றும் 12ம் வகுப்புகளில் வரும் கடுமையான கணக்குகள் பற்றி அவர்களுக்கு தெரியவாய்ப்பில்லை. பின்னர், 3 ஆண்டுகள் டிப்ளமோ படித்துவிட்டு, நேரடியாக பொறியியல் 2ம் ஆண்டில் சேர்ந்து விடுகின்றனர்.

இதனால், பொறியியல் பற்றி முதல் ஆண்டில் சொல்லித்தரப்படும் அடிப்படை அவர்களுக்கு கிடைப்பதில்லை. மேலும், கணக்குகள், அதன் வழிமுறைகள் போன்றவையும் அவர்களுக்கு முழுமையாக கிடைப்பதில்லை. 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்களில் 10 சதவீதத்தினர் இந்த முறையில் சேர்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான், மாணவர் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைகிறது. மேலும், தரமற்ற கல்லூரிகளும் மாணவர்கள் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.

அதேபோன்று, பிஇ படித்தவர்களையே ஆசிரியர்களாக வைத்து தனியார் கல்லூரிகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. ஒரு பிஇ மாணவனுக்கு பாடம் எடுக்க எம்இ அல்லது பிஎச்டி படித்தவர்கள் ஆசிரியராக நியமிக்கப்பட வேண்டும். ஆனால், சில தனியார் பொறியியல் கல்லூரிகளில், எம்இ அல்லது பிஎச்டி படித்த ஆசிரியருக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, பிஇ படித்தவர்களே ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். இத்தகைய தகுதியற்ற ஆசிரியர்களாலும் மாணவர்களின் தோல்வி எண்ணிக்கை அதிகரிக்கிறது.

கமிஷனுக்காக அழைத்து வரப்படும் மாணவர்கள்

தமிழகத்தில் நாளுக்கு நாள் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இத்தகைய கல்லூரிகளை திறந்து விடுகிறார்களே தவிர, அதில் சேருவதற்கு போதுமான மாணவர்கள் இல்லை. இதனால், வெளி மாநிலங்களில் குறைவான மதிப்பெண் பெற்று, பொறியியல் சீட் கிடைக்காமல் இருக்கும் சில தகுதியற்ற மாணவர்களை, இங்கு படிப்பதற்கு அழைத்து வருகின்றனர்.

இவ்வாறு பணத்துக்காக, படிப்பில் சேர்க்கப்படும் தகுதியற்ற மாணவர்கள், இங்குள்ள மாணவர்களையும் கெடுத்து விடுகின்றனர். இவ்வாறு மாணவர்களை அழைத்து வருபவர்களுக்கு கமிஷனும் வழங்கப்படுவது வேதனையான விஷயம்.

1 comment:

  1. மாணவர்களின் தரமின்மைதான் முக்கியக் காரணம். குறைந்தபட்சம் அறுபது சதவீதம் பெற்றிருந்தால்தான் பொறியியல் கல்லூரியில் சேரவேண்டும் என்றிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

    ReplyDelete