Monday, November 18, 2013

ஏன் சனிக்கிழமையும் சீரியல் காட்றாங்கன்னு தெரியுமா…?


சூரிய டிவியில் சனிக்கிழமையன்றும் சீரியல் ஒளிபரப்புவதற்கான பின்னணியைப் பற்றி ஊடக உலகில் பலரும் பலவிதமாக
பேசிக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். காது கொடுத்து கேட்ட போது கிடைத்த விசயம் சுவாரஸ்யமானதாகத்தான் இருந்தது. குடும்ப கட்சி ஆட்சியில் இருந்த போது ஒரு படம் விடாமல் வாங்கி குவித்தது சூரிய டிவி. படத்தயாரிப்பு, விநியோகம் என அடித்து பிடித்து வாங்கி நிறைய பேரின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டது. சேனலுக்கு எதிராக குடும்ப கட்சி கடைவிரித்த உடன் போட்டி கிளம்பியது. இளந்தலைமுறை சேனலின் மூலமாகவும் போட்டி தொடங்கியது. அதோடு மட்டுமல்லாது ஆட்சி மாறிய உடன் காட்சியும் மாறியது. விநியோக உரிமை, படத்தயாரிப்பு என அனைத்திலும் முன்பைப் போல ஈடுபடமுடியவில்லை சூரியடிவியினால். அதோடு நில்லாமல் திரைப்படங்களின் சேட்டிலைட் உரிமத்திலும் இப்போது சிக்கல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சூரிய டிவி ஒரு படத்தை விநியோகம் செய்தால் மணிக்கு பலமுறை முன்னோட்டம் போட்டு மக்களை தியேட்டருக்கு வரவழைப்பார்கள். இதனால் பல பட்ஜெட் படங்கள் வசூலை குவித்தன.
சினிமா போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்தவர்கள் பலரும் இதே முறையை பின்பற்றி டிவியில் விளம்பரம் செய்வதற்கென்றே பட்ஜெட்டில் பணம் ஒதுக்கவேண்டியதாகிவிட்டது.
தமிழ்நாடு முழுக்க 100 தியேட்டர்களை வாங்க நினைத்த சூரிய டிவி அதிக அளவில் படங்களை தயாரிக்கவும் திட்டமிருந்தது. ஆட்சி மாறிய உடன் சட்டென காட்சிகளும் மாறிவிட்டன. குழுமத்தின் திரைப்பட குழுவில் இருந்தவர்கள் கம்பி எண்ணி கடைசியில் காணாமல் போனார்கள்.
பட விநியோக உரிமை, சேட்டிலைட் ரைட்ஸ் என முன்போல முட்டி மோத முடியாது என அடக்கி வாசிக்க ஆரம்பித்துவிட்டது சூரிய டிவி. தலைவா படத்தின் உரிமையை வாங்கிய போதே அதை முற்றிலும் உணரத் தொடங்கிவிட்டது.
டிவியில் போட்ட படங்களையே போட்டு ரசிகர்களை வெறுப்பேற்ற வேண்டாம். புதுப்புது நிகழ்ச்சிகளை தயாரிக்க ஆட்களைத் தேடிவேண்டிய நிலையில் இல்லை. இருக்கவே இருக்கு சீரியல் அப்புறம் எதற்குக் கவலை என்று சனிக்கிழமையும் சீரியலை ஒளிபரப்ப கட்டளையிட்டு விட்டது நிர்வாகம்.

No comments:

Post a Comment