ஒன்றுக்கு இரண்டாக மோட்டார் சைக்கிள் இருக்கிறது.
ஆனாலும், வீட்டிலிருந்து, தான் வேலை பார்க்கும் இடத்திற்கு, தினமும் சைக்கிளில் தான் போய் வருகிறார்.கிட்டத்தட்ட, 52 கி.மீ., தூரம் சைக்கிளில் போய் வந்து கொண்டிருப்பதற்கான காரணம் கஞ்சத்தனம் அல்ல, இயற்கையின் மீதும், ஆரோக்கியத்தின் மீதும் கொண்ட
அக்கறைதான்.
சென்னை தாம்பரத்தில் குடியிருக்கும் சரத் நம்பியார் (வயது 51) கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, "தட்சிணசித்ராவில்' பொறுப்பான பணியில் இருக்கிறார். இவர் குடியிருக்கும் இடத்திற்கும், வேலை பார்க்கும் இடத்திற்கும் உள்ள, 26 கி.மீ., தூரத்திற்கு, இவர் முதலில் காரில்தான் சென்றார்.
நான்கு பேர், ஐந்து பேர் போகக்கூடிய காரில், தனி ஆள் செல்வது, இந்தியா போன்ற எரிபொருள் தட்டுப்பாடு உள்ள நாட்டில் செய்யப்படும் வீண் செலவு என்று படித்ததிலிருந்து, குடும்பத்தோடு அல்லது குழுவாக போனால்தான் கார் சவாரி செ#வது என்று முடிவெடுத்தார். அதன்பின், சுற்றுச்சூழல் பெரிதும் கெடுவதற்கு காரணம், வாகனங்கள் வெளியேற்றும் புகையே என்பதை அறிந்து, சைக்கிளில் அலுவலகம் சென்று வரலாம் என்று முடிவெடுத்தார்.
உடனே, சைக்கிள் கடைக்கு போ#, நான்காயிரம் ரூபாய்க்கு ஒரு சைக்கிள் வாங்கினார். கடைக்காரர், "நீங்கள் ஓட்டப் போகிறீர்களா? "கியர்' வைத்த சைக்கிள் வாங்கிக் கொள்ளுங்கள், மிதிப்பதற்கு இலகுவாக இருக்கும், வேகமாகவும் ஓடும்...' என்றார். "இல்லையில்லை, நான் கஷ்டப்பட்டுதான் சைக்கிள் ஓட்ட வேண்டும், அப்போதுதான் உடம்பு ஆரோக்கியம் கூடும்...' என்று சொல்லி, "கியர்' இல்லாத சாதாரண சைக்கிளை வாங்கினார்.
மறுநாள் காலை சைக்கிளில், தலையில் சைக்கிள் சவாரிக்கான, "ஹெல்மெட்' அணிந்து, கிளம்பி விட்டார். இது நடந்தது கடந்த 2009ம் ஆண்டு. அன்று முதல் இன்று வரை, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக சைக்கிளில் தான் போய் வந்து கொண்டு இருக்கிறார். ஆரம்பத்தில், இரண்டு மணி நேர பயணமாக இருந்தது, இப்போது, 55 நிமிடமாக குறைந்து விட்டது.
"சைக்கிளில் போனால் மிகவும் களைப்பாகி விடும், பிறகு வேலை பார்க்க முடியாது, இது தொடர்பான உடல் வலி வரும்...' என்றெல்லாம் பயமுறுத்தினர், கேலி செய்தனர், கிண்டலடித்தனர், நான் எதையும் கண்டு கொள்ளவில்லை. உண்மையில் என் உடம்பில் புது சக்தி பிறந்து விட்டது. மற்றவர்களைவிட, "எனர்ஜிடிக்காக' என்னால் அலுவலகத்தில் வேலை பார்க்க முடிகிறது. மேலும், சைக்கிள் ஓட்ட ஆரம்பித்த பிறகுதான், மாரத்தான் போன்ற நீண்ட தூர ஓட்டப் போட்டிகளிலும், மலையேறும் பயிற்சிகளிலும் ஈடுபட ஆரம்பித்தேன்.
உண்மையில், சைக்கிள் ஓட்டாதவரை, அதன் பலன் யாருக்கும் தெரியப்போவது இல்லை, ஓட்டிப் பாருங்கள், அப்புறம் உணர்வீர்கள்...' என்று சொல்லும் சரத் நம்பியார், தன் சைக்கிளில் நிறைய வாசகங்களும் எழுதி வைத்துள்ளார்... "சுற்றுச்சூழலுக்கு நீங்கள் நண்பனாகலாம். நாட்டிற்கு எரிபொருள் மிச்சம், நமக்கும் பணம் மிச்சம், ஒரு சைக்கிள், ரோட்டில் ஓடினால், ஒரு கார் ரோட்டில் ஓடுவது குறையும், போக்குவரத்து பிரச்னையில்லை...' போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
அப்புறமென்ன, "என்னாலும் சைக்கிள் ஓட்ட முடியும்...' என்று முடிவெடுத்து, விட்டீர்களா?
கிளம்புங்கள் சைக்கிள் வாங்குவதற்கு!
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
ReplyDelete